காத்திருக்கும் கர்த்தர்! - Christking - Lyrics

காத்திருக்கும் கர்த்தர்!


நான் சிறுவனாய் இருந்தபோது, ஒருமுறை இலங்கைக்கு சென்றேன். வழியில் மண்டபம் கேம்ப் சென்று, அந்த இடத்தில் ஓரிரு நாள் தங்க வேண்டியதாயிற்று. அதன் பின்பு தனுஷ்கோடியில் கப்பல் ஏறி மாலைப் பொழுதில் இலங்கையின் கரையான ‘தலைமன்னார்’ என்ற துறையை அடைந்தது.

எங்கள் அன்பு தகப்பனார் சிரித்த முகத்தோடு அடுத்த கரையில் நின்று கொண்டிருக்கிறதைக் கண்டோம். எங்கள் உள்ளம் மகிழ்ந்து பரவச மடைந்தது. “உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள் மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்” (ஏசா. 30:18).

இன்றும் கூட, உங்களுடைய எதிர்காலம் எப்படியிருக்குமோ என்று கலங்கிக் கொண்டிருக்கலாம். கர்த்தர் உங்களுக்காக காத்துக்கொண்டே இருக்கிறார். புதிய ஆசீர்வாதங்களோடும், புதிய கிருபையோடும், புதிய வல்லமையோடும், கூட உங்களை நிரப்ப அவர் ஆவலுள்ளவராய் இருக்கிறார்.

ஒருவேளை நீங்கள் புதுடெல்லி செல்லும்போது, விமான நிலையத்தில் இந்திய ஜனாதிபதியும், பிரதமரும் உங்களை வரவேற்கும் படி காத்திருப்பார்களென்றால், நீங்கள் எவ்வளவு முக்கியமானவர்களாய் இருப்பீர்கள். அப்பொழுது உங்களுக்கு ஒரு பெருமிதம், பெருமை ஏற்படலாம்.

அன்று கெட்டக்குமாரன், தன் பழைய வாழ்க்கையை முடித்துக் கொண்டு, தகப்பனை நோக்கி, ஓடிவரத் தீர்மானித்தான். அவன் பழைய கந்தல் ஆடையைப் பார்த்தான். ஒட்டிப்போயிருந்த வயிற்றைப் பார்த்தான். நாற்றம் அடிக்கிற சரீரத்தைப் பார்த்தான். என் தகப்பனிடத்தில் செல்வேன். என் தகப்பனுடைய வீட்டில் வேலைக்காரர்களுக்குக் கூட, நல்ல உணவு வகைகள் உண்டே என்று சொல்லி தன் தகப்பனை நோக்கி திரும்பி வந்தான்.

அங்கே அவனது தகப்பன் அவனுக்காக எதிர்பார்த்து காத்துக் கொண்டேயிருந்தார்! அன்றோடு அவனது பழைய வேதனையான வாழ்க்கை முடிந்தது! ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பித்தான்!

காத்திருக்கும் கர்த்தர்! காத்திருக்கும் கர்த்தர்! Reviewed by Christking on August 07, 2017 Rating: 5
Powered by Blogger.